குட்டிக்கதை

ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில்
வாய்ச்சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான்
.

ஆனால் அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் "இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்துவிட்டான்" என்று எழுதினான். ஆனால் அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர்.

நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக்
கொண்டான்.

அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கிவிட்டான். மேலே வந்ததும் அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான். பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்த பெரிய கல்லின் மீது "இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்" என்று தட்டி தட்டி
எழுதினான்.

இதைப்பார்த்த காப்பாற்றிய நண்பனுக்கு ஒன்றும் புரியாமல், "உன்னை அறைந்த போது மணலில் எழுதினாய், இப்போது உன்னை காப்பாற்றிய போது கல்லில் எழுதுகிறாய். இதற்கு
என்ன அர்த்தம்? ஒன்றும் புரியவில்லை" என்று சொல்லி கேட்டான்.

அதற்கு அறை வாங்கிய நண்பன் "யாராவது நம்மை கஷ்டப்படுத்தினால் அவர்களை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு என்னும் காற்று அதை மனதில் இருந்து அழித்துவிடும். அதுவே நமக்கு
யாராவது நல்லது செய்தால், அதை கல்லில் எழுதிவிடு. அது எப்போதும் மனதில் இருந்தது அழியாது" என்று சொன்னான்.